நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிப்பதா என்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்ய வேண்டும் என நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செய்த வரலாற்றுத் தவறுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், வரி குறைப்பு, பொருத்தமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நடாதமை மற்றும் கடன் மறுசீரமைப்பில் தாமதம் என்பனவே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டின் செலவினமானது வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது 2021 ஆம் ஆண்டின் மொத்த வருவாய் 1464 பில்லியன் என்றும் செலவு 3522 பில்லியன் ரூபாய் எனவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருப்பதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.